ஓமனில் கொள்ளையர்களை தடுத்த இந்தியர் படுகொலை: 6 பேர் கைது
துபாய்: ஓமனில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த இந்தியர் கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜான் பிலிப். அவர் ஓமனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளாக ஓமனில் வேலை செய்து வந்த ஜானை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து காணவில்லை என அவருடன் பணியாற்றிய ஒருவர் சனிக்கிழமை போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஜான் பிணமாகக் கிடந்ததை போலீசார் புதன்கிழமை கண்டுபிடித்தனர். ஜான் பணியாற்றிய பங்க்கில் இருந்து ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஜான் மாயமான அன்று பங்க்கில் உள்ள சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டதுடன் அதில் இருந்த கேசட்டையும் காணவில்லை.
போலீசார் ஜான் வழக்கு தொடர்பாக ஓமனை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். அந்த 6 பேரும் பங்க்கை கொள்ளையடித்துவிட்டு அதை தடுக்க வந்த ஜானை கடத்திச் சென்று கொலை செய்து உடலை வீசியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஜானுக்கு பினு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.