ஹஜ் யாத்ரீகர்களுக்காக உருது மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்திய இந்தியர்
துபாய்: சவுதி அரேபியாவில் ஹஜ் மற்றும் உம்ரா செய்வது தொடர்பான தகவல்களை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்தியர் ஒருவர் உருது மொழி அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
துபாயில் வசித்து வருபவர் இந்தியரான நஜீப் காசிமி. அவர் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உருது மொழி அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளார். யுனிகோடில் உள்ள அப்ளிகேஷன் மூலம் ஹஜ், உம்ரா பற்றிய தகவல்களை காபி செய்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பகிரலாம்.
இது குறித்து காசிமி கூறுகையில்,
13 எம்பி அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் கிடைக்கும். அதை இரண்டே நிமிடத்தில் ஆன்ட்ராய் டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்யலாம். விரைவில் அந்த அப்ளிகேஷன் ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும். ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள முதஸ்ஸிர் அய்யூப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முகமது அப்துல் பாசித் கான் ஆகியோரின் உதவியுடன் அப்ளிகேஷனை உருவாக்கினேன்.
உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 700 மில்லியன் ஆகும் என்றார்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.