துபாய் மெட்ரோவில் பயணம் செய்து 50 கிராம் தங்கக்காசை வென்ற தஞ்சை சாந்தி
துபாய்: துபாயில் வீட்டு வேலை செய்யும் தமிழ் பெண் துபாய் மெட்ரோவில் பயணம் செய்ததற்காக 50 கிராம் தங்கக் காசு வென்றுள்ளார்.
துபாயில் உள்ள அரபு குடும்பத்தார் வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தி ராபின்(54). அவர் கடந்த 22 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வருகிறார். அரசு போக்குவரத்தை பயண்படுத்துமாறு துபாய் அதிகாரிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் துபாய் மெட்ரோவில் பயணம் செய்ததற்காக சாந்திக்கு 50 கிராம் தங்கக் காசு பரிசாக கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
மெட்ரோவில் பயணம் செய்ததற்காக எனக்கு தங்கக் காசு கிடைத்துள்ளது. இது கடவுளின் அருட்கொடை. இதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் நகரின் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோவில் பயணம் செய்ததால் என் கார்டில் அதிக புள்ளிகள் சேர்ந்தன. வீட்டு வேலையை முடித்த பிறகு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல எனக்கு அனுமதி அளித்த ஸ்பான்சர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு துபாய் மெட்ரோ அத்துப்படி என்று பெருமையாக சொல்வேன் என்றார்.
பொது போக்குவரத்து தின கொண்டாட்டத்தையொட்டி மக்களை அரசு போக்குவரத்தை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் கடந்த 2 வாரமாக செய்து வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு ரொக்கம், தங்கக் காசுகள், ஸ்மார்ட் வாட்ச்சுகள், ஹெட்போன்கள், லேப்டாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.