ஆஸி.யில் 5 பெண்களைத் தாக்கிய இந்தியருக்கு ரயிலில் பயணம் செய்ய தடை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஓடும் ரயிலில் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு குறிப்பிட்ட ரயில் தடங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர் பகுதியில் வசித்துவருபவர் இந்திய வம்சாவளியான அஜய் ஷோப்ரா(41). இவர் சமீபத்தில் ஒருநாள் பென்டிகோ-மெல்போர்ன் ரயிலில் பயணம் செய்தபோது அதே ரயிலில் பயணம் செய்த 5 பெண்களை தாக்கி விட்டார்.
சம்பந்தப்பட்ட பெண்களின் உள்ளங்கையில் இருக்கும் வாசகத்தை படிக்க முயன்ற போது இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அஜய் தாக்கிய பெண்கள் 5 பேரும் 20 முதல் 30 வயதுடையவர்கள்.
இதனையடுத்து பெண்களைத் தாக்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் சம்பந்தப்பட்ட 2 ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் பயணம் செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அஜய் தனது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்கவும், வாரம் 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் தனது தவறை தான் ஏற்றுக் கொள்வதாகவும், சமாதானமாக போக தயாராக இருப்பதாகவும் அஜய் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ள நீதிபதி அஜய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.