தமிழ்நாட்டின் மானத்தை சிங்கப்பூர் "லிப்ட்"டில் பறக்க விட்ட இளைஞர்...!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லிப்ட் ஒன்றில் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த இந்திய இளைஞருக்கு 4 வார சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள செரங்கூன் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் காலை 7.45 மணியளவில் ரயிலை விட்டிறங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் சாலை பகுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த லிப்ட்டில் ஏறினார்.
லிப்ட்டின் கதவு மூடப்போகும் நேரத்தில் வேகமாக ஓடி வந்து லிப்ட்டுக்குள் நுழைந்துக் கொண்ட ஒரு வாலிபர் லிப்ட் மேலே போகும் அந்த இடைவெளி நேரத்தில் கிடைத்த தனிமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார்.
பதறிப்போன அந்தப் பெண் அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதோடு மட்டும் இருந்து விடாமல் சாலை பகுதியை அடைந்ததும் லிப்ட்டின் கதவு திறக்கும் நேரத்தில் தன்னிடம் வரம்பு மீற முயன்ற வாலிபரின் சட்டையை கொத்தாக பிடித்து வாசலில் நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்தியாவை சேர்ந்த அந்த வாலிபர் சிங்கப்பூருக்கு வந்து இங்கு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருவது தெரியவந்தது. அவரது பெயர் கந்தசாமி கிருஷ்ணன்.
அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான் என்று வாக்குமூலம் அளித்த கந்தசாமி கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக கடந்த 6 மாத காலமாக கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றத்தை கந்தசாமி கிருஷ்ணன் ஒப்புக் கொண்டதால் அவருக்கு 4 வார சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.