ஆட்டி விட அன்னை வேண்டாம்... தானியங்கி தொட்டிலை வடிவமைத்த மஸ்கட் வாழ் இந்தியர்
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மெக்கானிக்காக பணியாற்றும் இந்தியர் ஒருவர் ஆளில்லாமல் தானே ஆடும் தானியங்கி தொட்டிலை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என்று நேரம் செட் செய்து வைத்து விட்டால் அந்த நேரம் வரை இந்த தானியங்கி தொட்டில் தங்கு தடையின்றி ஆடிக் கொண்டிருக்கும்.
அந்த நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் சிணுங்கல் அல்லது அழுகுரல் கேட்டால் மீண்டும் தானாகவே தொட்டில் ஆடத் தொடங்கி விடும்.
தூங்க வைக்க கஷ்டம்:
இந்த யோசனை எப்படி தோன்றியது என்பது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் மாதவன் என்ற அந்த மெக்கானிக் கூறியதாவது, "நாள்தோறும் வீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண்கள் குழந்தை வளர்ப்பிலும், குழந்தைகளை தொட்டிலில் இட்டு, தாலாட்டி தூங்க வைப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டு, சிரமப்படுவதை எங்கள் ஊரில் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
தாய்மார்களின் பணிச்சுமை:
தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஒரு தானியங்கி தொட்டிலை தயாரிக்க முடிவு செய்தேன். எனது மெக்கானிக் தொழில் அனுபவத்தின் மூலம் இயந்திரவியல் ஓரளவுக்கு அத்துப்படியாக இருந்தது.
மின்விசிறிக்கான மின்சாரம்:
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, சுமார் 5 ஆண்டு தீவிர முயற்சியின் பலனாக இந்த தொட்டிலை உருவாக்கினேன்.இந்த தொட்டிலை இயக்க ஒரு மின் விசிறிக்கு செலவாகும் மின்சாரமே போதுமானதாகும்.
மலிவு விலையில் கிடைக்கும்:
தற்போது, உலோகத்தால் செய்திருக்கும் இந்த தானியங்கி தொட்டிலை, விரைவில், "ஃபைபரில்" தயாரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன்.அப்போது, அனைத்து தாய்மார்களும் இந்த தானியங்கி தொட்டிலை மலிவான விலையில் வாங்கி பயனடைய முடியும்" என்று கூறியுள்ளார்.