நியூசி. இந்தியர்களிடம் பணம் பறிக்கும் போலி டாக்டர்கள்.. விளம்பரம் தரும் பத்திரிகைகள் மீது சரமாரி புக
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பில்லி சூனியம் எடுப்பது, பரிகாரம் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரும் தங்களை டாக்டர்கள் என்று கூறிக் கொள்ளும் போலி டாக்டர்களுக்கு சாதகமாக விளம்பரம் தரும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நியூசிலாந்து விளம்பர தர ஆணையத்திடம் இந்தியர்கள் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
நியூசிலாந்து வெளியாகும் இந்திய ஊடகங்களான இந்தியன் நியூஸ் லிங், மனுகா கூரியர், அப்னா டெலிவிஷன் ஆகியவற்றின் மீது புகார் தரப்பட்டுள்ளது.
இந்த புகாரை நியூசிலாந்தைச் சேர்ந்த இந்தியன் மீடியா வாட்ச் என்ற அமைப்பின் சார்பாக தாக்கூர் ரஞ்சித் சிங் என்பவர் கொடுத்துள்ளார்.
கவலை...
சமீபத்தில் இந்தியர்களின் கூட்டம் ஒன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. அதில் இதுபோன்ற கபடநாடகதாரிகளின் விளம்பரங்களை இந்த மீடியாக்கள் பிரசுரிப்பதும், அவர்களுக்கு சாதகமாக செய்திகள் போடுவதும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடானது என்று கவலை தெரிவிக்கப்பட்டது.
பணம் பறிப்பு...
போலியான விளம்பரங்கள் மூலம் இந்த போலி டாக்டர்கள் இந்தியர்களிடமிருந்து பல லட்சம் அளவுக்கு பணத்தை பறிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்தே தற்போது நியூசிலாந்து அரசிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கோரிக்கை...
மேலும் இதுபோன்ற போலிகளை நியூசிலாந்தில் தங்கி தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதத்திற்கும் கெட்ட பெயர்...
மேலும், இந்துக் கடவுள்களின் பெயர்களை தவறான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இவர்கள் மதத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார் ரஞ்சித் சிங்.