முதல்முறையாக வாய்ப்பு.. பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவ் சந்தித்தார் இந்திய அதிகாரி
இஸ்லாமாபாத்: இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பெயரில் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை முதல் முறையாக இந்தியா சார்பில் அதிகாரி ஒருவர் இன்று சந்தித்து பேசினார்.
49 வயதாகும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.
இதை எதிர்த்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சமீபத்தில் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், பாகிஸ்தான் நீதிமன்றம் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் இந்திய தரப்பிலிருந்து குல்பூஷன் ஜாதவை சந்திக்கவும் அவருடன் கலந்து பேசவும் அனுமதிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து, இந்திய தரப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக இந்தியா தரப்பில் வெளியுறவு துறை மூத்த அதிகாரி கவுரவ் அலுவாலியா இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சார் சிறைச்சாலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஈரானிலிருந்து குல்பூஷன் ஜாதவ் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அவர் உளவு பார்க்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.