ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலி தரகரை நெருங்கும் இந்திய அதிகாரிகள்!
இத்தாலியின் பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் அதி முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) பயணம் செய்யும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு பின்மெக்கானிக்கா நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.362 கோடி லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. இதனை தியாகி மறுத்து வந்த நிலையில், அவரது வங்கிக் கணக்குகளையும், மற்ற குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளையும் சி.பி.ஐ. முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் குய்டோ ரல்ஃப் ஹஸ்ச்கேவிடம் இத்தாலி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்தான் தியாகி மற்றும் அவரது உறவினர்களுக்கு பணம் அனுப்பியவர் என்பதால் அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்த நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி அளித்திருந்தது.
ஆனால் இடைத்தரகர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வந்திருந்த இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ, நீதிமன்றம் அனுமதி அளித்தும் அந்த இடைத்தரகரிடம் விசாரணை நடத்த மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேசமயம் டிசம்பர் 13ம் தேதி இடைத்தரகரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்சம் கொடுக்கப்பட்டது நிரூபணம் ஆகும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.