இந்திய வம்சாவளி பேராசிரியர் உள்பட 4 பேருக்கு கணித நோபல்
பீல்ட்ஸ் மெடல், 1936-ம் ஆண்டு சர்வதேச கணித சங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கனடா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம்) ரொக்கப்பரிசும், பதக்கமும் கொண்டது இந்த விருது. ஆண்டுதோறும் கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு இந்த பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று இந்தாண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஞ்சுள் பார்கவா, மரியம் மிர்ஜாகனி, ஆர்தர் அவிலா மற்றும் மார்ட்டின் ஹேரர் என நான்கு பேருக்கு இந்தாண்டு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட உள்ளது.
இவர்களில் மஞ்சுள் பார்கவா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா அமெரிக்கர். மரியம் மிர்ஜாகனி ஈரானைச் சேர்ந்த பெண்மணி. ஆர்தர் அவிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்ட்டின் ஹேரர் ஆஸ்திரியாக்காரர்.
தற்போது 40 வயதான மஞ்சுள் பார்கவா, 1974-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ந் தேதி கனடாவின் ஹேமில்டனில் பிறந்தவர். நியூயார்க்கில் வளர்ந்தவர். 14 வயதிலே பள்ளிக்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி முடித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற மஞ்சுள் பார்கவா, தற்போது அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இன்னொரு இந்தியருக்கு ரோல்ப் விருது
அதேபோல், மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் என்ற கணித பேராசிரியர் ரோல்ப் நேவான்லின்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.