ஒரு கையில் குழந்தை, மறுகையில் ஏகே 47... ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த இந்தியர்!
லண்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வரும் இந்தியர் ஒருவர் ஒரு கையில் ஏகே 47 துப்பாக்கியையும், மற்றொரு கையில் புதிதாக பிறந்த தனது குழந்தையையும் ஏந்தியவாறு டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் சித்தார்த்தா என்ற 31 வயது இளைஞர் உட்பட 8 பேர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி கைது செய்யப் பட்டனர். பின்னர் பெயிலில் வெளியே வந்த அவர்கள், மீண்டும் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப் பட்டது.
ஆனால், கர்ப்பமாக இருந்த தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் லண்டனை விட்டு வெளியேறினார் சித்தார்த்தா. பஸ் மூலம் பாரீஸ் புறப்பட்டுச் சென்று, பின் அங்கிருந்து சிரியா போய் விட்டார்.
இந்நிலையில், சித்தார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், ஒரு கையில் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தியவாறும், மறுகையில் தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை ஏந்தியவாறும் சித்தார்த்தா போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தின் கீழே, ‘தனது மகன் இஸ்லாம் நாட்டில் வளர்வது பெருமையாக உள்ளதாக' சித்தார்த்தா எழுதியுள்ளார்.
இதன்மூலம், சித்தார்த்தா தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சிரியாவில் நடைபெறும் போரில் ஈடுபட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, மதம் மாறிய சித்தார்த்தா தன்னுடைய பெயரை, அபு ருமேசாஹ் என்று மாற்றிக் கொண்டதாகவும், தொலைக்காட்சிகளில் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.