கோலாலம்பூர் வரலாற்றிலேயே முதல் முறையாக.. போலீஸ் கமிஷனரான சீக்கியர்!
கோலாலம்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் ஒரு சீக்கியர் போலீஸ் கமிஷனர் ஆகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் அமர் சிங்(58) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் ஒரு சீக்கியர் போலீஸ் கமிஷனராகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
நகர காவல் தலைமையகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய அமர் கூறுகையில்,
நான் கோலாலம்பூர் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளது மலேசியாவில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கிடைத்த கவுரவம். மலேசிய காவல் துறையில் 0.16 சதவீத சீக்கியர்கள் உள்ள நிலையில் நான் கமிஷனராகியுள்ளது பெருமையாக உள்ளது.
இனம், நிறத்தின் அடிப்படையில் யாரையும் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.
பல ஆண்டுகளாக கோலாலம்பூரின் துணை போலீஸ் தலைவராக இருந்த அமர் சிங்கின் தந்தையும், தாத்தாவும் கூட போலீஸ்காரர்கள் தான்.
அமரின் தந்தை இஷார் சிங் 1938ம் ஆண்டு மலேசியா சென்றார். 1939ம் ஆண்டு மலாய் மாநில காவல் துறையில் சேர்ந்தார். மலேசியா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்த அமர், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.யும் படித்துள்ளார். மேலும் ஷரியா சட்டத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார்.