செக்ஸ் குற்றங்கள்: அமெரிக்காவில் இந்தியருக்கு 46 ஆண்டு சிறை
நியூஜெர்சி: அமெரிக்காவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்தியருக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் வசித்து வருபவர் ஹித்தேன் பட்டேல்(36). அவர் கடந்த 2012ம் ஆண்டு 5 பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது, பலாத்காரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினார். மேலும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டேலை கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் மீதான 22 கிரிமினல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. அதில் பாலியல் பலாத்காரங்கள், பாலியல் தொல்லை குற்றங்களும் அடக்கம். அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூ ஜெர்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காம்டன் கவுன்ட்டியைச் சேர்ந்த 21 வயது பெண் கூறுகையில்,
கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டேல் தான் ஒரு துப்பறியும் அதிகாரி என்று கூறி அதற்கான ஐடியை காண்பித்தார். என்னை ஒரு வேனுக்குள் செல்லுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு அவர் என்னை துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்தார் என்றார்.
அந்த பெண் வேனில் இருந்து தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து பட்டேலை கைது செய்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு தான் அது போலித் துப்பாக்கி என்பது தெரிய வந்தது.