தங்க கட்டிகள் திருடிய வழக்கில் இந்திய வம்சாவளி மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை!
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் தங்க கட்டிகள் திருடிய வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறைதண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சிங்கப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன் சென்றார். அவர்களில் ஒருவர் தனது தந்தை இந்தியாவில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், சொந்த தேவைக்காக தங்கக் கட்டிகள் வாங்க வந்திருப்பதாகவும் கூறினார்.
கடையின் விற்பனையாளர் தங்கக்கட்டிகளை எடுத்து காட்டிக் கொண்டிருக்கும்போது, அவற்றில் சுமார் 14,475 டாலர்கள் மதிக்கத்தக்க 4 தங்கக்கட்டிகளை எடுத்துக் கொண்டு நண்பர்களில் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.
அவரை தொடர்ந்து மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு நழுவினர். கடையின் சி.சி.டி.வி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை சில தினங்களுக்குள் போலீசார் கைது செய்தனர். திருடிய தங்கக்கட்டியை விற்று மூவரும் செலவு செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவரான சிவசக்தி குமரன் நாகராஜன் என்பவருக்கு அபராதத்துடன் கூடிய 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.