அமெரிக்காவில் போட்டோ எடுத்த இந்திய வம்சாவளி மாணவரை கடித்து குதறி கொன்ற கரடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் வனப்பகுதியில் கரடியை புகைப்படம் எடுத்த இந்திய வம்சாவளி மாணவர் அந்த மிருகத்தால் தாக்கி கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷ் பட்டேல். அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி நியூ ஜெர்சியில் உள்ள வெஸ்ட் மில்போர்டு அப்ஷவா வனப்பகுதிக்கு சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது வனப் பகுதியின் நுழைவாயிலில் அவர்கள் ஒரு ஆண் மற்றும் பெண்ணை சந்தித்துள்ளனர்.
வனப்பகுதியில் கரடி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது, அதனால் உள்ளே செல்லாதீர்கள் என்று அவர்கள் பட்டேல் மற்றும் அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பட்டேலும், நண்பர்களும் அவர்களின் பேச்சை கேட்காமல் சென்றனர். வனப்பகுதியில் சுற்றிய கரடியை பார்த்த அவர்கள் சும்மா இல்லாமல் புகைப்படம் எடுக்கத் துவங்கினர்.
பட்டேல் 100 அடி தூரத்தில் இருந்து கரடியை புகைப்படம் எடுத்தார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப கரடி அவர்களை பின்தொடர்ந்தது. உடனே 5 பேரும் பயத்தில் ஆளுக்கொரு பக்கம் ஓடினர். மற்ற நான்கு பேரும் தப்பித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பட்டேல் பாறை ஒன்றின் மீது ஏற கரடியும் அவரை பின் தொடர்ந்து வந்தது.
கரடி பட்டேலை கடித்துக் குதறி கொன்றுவிட்டது. இரண்டு மணிநேரம் கழித்து அவரது உடல் தான் கிடைத்தது. 1850களுக்கு பிறகு தற்போது தான் நியூ ஜெர்சியில் ஒருவர் கரடியால் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.