குடும்பத்தகராறில் மனைவி குடும்பத்தையே சுட்டு காலி செய்த லாரி டிரைவர் - சிக்கியது எப்படி
ஓஹாயோ: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு விசாரணை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மனைவி, மாமியார், மாமனார் மச்சினியை சுட்டுக்கொன்று விட்டு அப்பாவி போல நாடகமாடிய ட்ரக் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். க்ரைம் திரில்லர் கதை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
கொலையாளியின் பெயர் குர்பிரீத் சிங் என்பதாகும். ட்ரக் டிரைவராக வேலை செய்கிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். ஓஹியோ மாகாணத்தில் புறநகர் பகுதியில் தனது மனைவி, மாமனார், மாமியார் அவரது சகோதரி ஆகியோருடன் வசித்து வந்தார்.
வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த போது ஏப்ரல் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு அந்த வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம நபர் வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றான் இதில் ஹக்கிகத் சிங் பனாக் , அவரது மனைவி பரம்ஜித் கவுர், அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர், ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
போலீசுக்கு தகவல்
வேலை முடிந்து வீடு திரும்பிய குர்பிரீத் சிங், நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டு மரணமடைந்திருப்பதாக போலீசில் தகவல் சொன்னார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்தவர்கள் யாராக இருக்கக் கூடும் இது இனவெறி தாக்குதலாக இருக்கலாமோ என்றெல்லாம் யோசித்தனர்.
சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பிய குழந்தைகள்
அந்த பகுதியைச் சேர்ந்த சீக்கிய மதகுரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களையும் அடையாளங்களையும் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டார். தாக்குதல் நடந்த சமயத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் அவர்கள் தப்பினர். கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு கடும் சவால் ஏற்பட்டது. யார் மீதும் சந்தேகமும் எழவில்லை.
குற்றவாளிகள் பிடிபடுவார்கள்
குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் செய்தி வெளியிட்டது. காவல்துறையினர் விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அப்போதய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த தாக்குதல் இனவெறி தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்தியாவில் வசித்து வந்த அமர்ஜித் கவுர் அமெரிக்காவில் வசித்து வந்த உறவினர்களை சந்திக்க சென்ற போது துப்பாக்கிச்சூட்டில் பலியானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிக்கிய குற்றவாளி
முன்று மாதங்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு தேடிய போலீசார், குர்ப்ரீத் சிங்தான் குற்றவாளி என்று கண்டு பிடித்தனர். முதலில் குற்றத்தை ஒத்துக்கொள்ளாமல் முரண்டு பிடித்தான். தங்களது பாணியில் விசாரிக்கவே, குடும்பத்தகராறில் குடும்பத்தை கொலை செய்ததை ஒத்துக்கொண்டான். கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை பக்கத்தில் இருந்த குளத்தில் வீசிவிட்டு தப்பி விட்டான்.
கொலை செய்தது ஏன்
குளத்தில் இருந்து துப்பாக்கியை மீட்ட போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மூன்று மாத காலம் தூக்கத்தை தொலைத்த இந்த கொலைவழக்கில் விசாரணை விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. குர்பிரீத் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிக்கு மரணதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியர் குடும்பங்கள் மரணம்
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வெஸ்ட் டெஸ்மொய்னஸ் பகுதியில் வசித்து வந்தவர் சந்திர சேகர் சுங்காரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஐடி துறையில் பணியாற்றி வந்தார் சந்திர சேகர். இவரது மனைவி சுங்காரா இவர்களுக்கு 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். நான்கு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். வீட்டில் விருந்தினர்களாக தங்கியிருந்தவர்கள் சடலத்தை பார்த்த பின்னர் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.