லண்டனில் இந்திய வம்சாவளி நீதிபதியின் மகள் கைது: பயங்கரவாதி பட்டம்!
லண்டன்: லண்டனில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நீதிபதியின் 36 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதியின் மகளான குண்டால் பட்டேல் (36), கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முதல் முறையாக பயங்கரவாத தடுப்பு போலீஸாரால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதியின் மகள்
லண்டனில் நீதிபதியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மீனா பட்டேல். இவரது மகள் குன்டல் பட்டேல். இவர் கனேரி வாஃபில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிழக்கு லண்டனில் வசித்து வரும் இவர், தாமெஸ் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர்.
பயங்கரவாத தடுப்பு சோதனை
கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் பயங்கரவாத தடுப்பு சோதனையின் ஒரு பகுதியாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்டல் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
பதிலளிக்க மறுப்பு
கிழக்கு லண்டனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் குன்டல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; மற்ற விபரங்களை வெளியிட முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். குன்டல் பட்டேல் செய்த குற்றம் குறித்து பதிலளிக்க மறுத்த போலீசார், விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது எந்த விபரமும் கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
வங்கி அதிகாரி
குன்டல் பட்டேல் குறித்து தி டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த உள்ளூர் கவுன்சிலர் ரான் மேன்லே, குன்டலையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு தெரியும்; மதிப்பான குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் இந்து குடும்பம்; நீதிபதியாக இருக்கும் மீனாவிற்கு 2 மகள்கள் உள்ளனர்; குன்டல் வங்கியிலும், அவரது சகோதரி மருந்து துறையிலும் பணியாற்றி வருகின்றனர்; அவர்கள் பள்ளி படிக்கும் போதில் இருந்து எனக்கு தெரியும்; சகோதரிகள் இருவரும் மிகவும் அமைதியானவர்கள்; இனிமையாக பழகக் கூடியவர்கள்.
போலீஸ் தொடர் சோதனை
போலீசார் நடத்திய பயங்கரவாத தடுப்பு சோதனையின் போது வெளிநாட்டு தூதரக அதிகாரியின் மகன் ஜேம்ஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆனால் பலரது தூண்டுதலின் பேரில் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டார்.
தவறாக அவரது வீட்டில் சோதனை செய்ததாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். ஆனால் பட்டேலின் வீட்டில் தொடர்ந்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இருப்பினும் குன்டல் மீதான குற்றம் குறித்தோ, அவருக்கு எதிரான ஆதாரங்கள் குறித்தோ போலீசார் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.