இந்தியாவில் தொழில் முதலீடுகளை திரட்ட மோடி திட்டம் : உலக பொருளாதார மாநாடு குறித்து எதிர்பார்ப்பு
டாவோஸ் : இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காவும் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டமைப்புகள் குறித்து இன்று நடக்க உள்ள உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் உலக பொருளாதார கூட்டமைப்பின் சார்பில் பொருளாதார மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 48வது ஆண்டாக இந்த முறை ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடக்கிறது.
இதில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடியோடு மூத்த அமைச்சர்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள்
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உட்பட 70 நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க இந்திய நிறுவனங்களான ரிலையன்ஸ், டாடா,விப்ரோ, பஜாஜ் ஆகியவற்றின் தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.
நியூ இந்தியா குறித்து மோடி
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ‘நியூ இந்தியா' என்கிற தலைப்பில் அவரது உரை அமைய உள்ளதாகவும், அதில் இந்தியாவில் உலக நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைப்பார் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். தொழில் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டமைப்புகள் குறித்து விளக்கி முதலீடுகளை ஈர்ப்பார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இரண்டு மணி நேர சந்திப்பு
முன்னதாக நேற்று நடந்த உலகின் மிக முக்கிய 40 நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுக்கு மோடி விருந்தளித்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக நீண்ட இந்த சந்திப்பில், ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளோடும் இந்தியாவின் தொழில்முதலீடுகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. விருந்தில் கலந்துகொண்ட அனைவரின் கேள்விக்கு விரிவான முறையில் பதிலளித்தார் மோடி.
மாநாட்டில் யோகா பயிற்சி
இந்த மாநாடு நடக்கும் நான்கு நாட்களும் இந்தியாவில் இருந்து இரண்டு யோகா ஆசிரியர்கள் கலந்துகொண்டு, யோகா பயிற்சி அளிக்க உள்ளார்கள். இந்த பயிற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகள், பிற நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்து உள்ளனர். இந்த விழாவில் பிரபல நடிகர் ஷாரூக் கானிற்கு, உலக பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட நடிகர் என்கிற விருது வழங்கப்பட்டு உள்ளது.