பாக். சிறையில் இந்தியர் மர்ம மரணம்... அட்டாரி எல்லையில் உறவினர்கள் போராட்டம்
இஸ்லாமாபாத்: எல்லைத் தாண்டிச் சென்றதற்காக கைது செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர், சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிர்பால் சிங் (50). கடந்த 1992ம் ஆண்டு இவர் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்றபோது, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் லாகூர் உயர் நீதிமன்றம் கிர்பால் சிங்கை வெடிகுண்டு வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்படவில்லை. இதனால் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோட் லாக்பத் சிறையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கிர்பாலின் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அட்டாரி எல்லை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கிர்பாலின் சக சிறை கைதிகளிடம் லாகூர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அப்போது திடீரென நெஞ்சுவலியால் துடித்த கிர்பால் சிங், உடனடி யாக உயிரிழந்தார் என கைதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லாகூரின் கோட் லாக்பட் சிறை அதிகாரி நபீஸ் அஹமது கூறும்போது, "அவரது மரணம் இயற்கையானதாகவே தெரிகிறது. உடலில் சித்ரவதை செய்ததற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லை" என்றார்.
இந்த போராட்டத்தில் கிர்பால் சிங்கின் சகோதரி ஜகீர் கவுர் மற்றும் அவரது உறவினர்களுடன், தல்பீர் கவுரும் கலந்து கொண்டார். தல்பீர் கவுர் பாகிஸ்தான் சிறையில் சக கைதிகள் தாக்கியதில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கிர்பாலின் மர்ம மரணம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகளிடம் இந்திய துணை தூதர் ஆலோசனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, கிர்பால் மரணத்தின் பின்னணி குறித்த தகவல்களை திரட்டுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.