மஸ்கட், ரியாத்தில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்
மஸ்கட்: மஸ்கட் மற்றும் ரியாத்தில் வாழும் இந்தியர்கள் 67வது இந்திய குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் இந்திர மணி பாண்டே இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய குடியரசுத் தலைவரின் உரையினை அவர் வாசித்தார்.
அதன் பிறகு தார்சேட் இந்தியப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய தூதர் கலந்து கொண்டார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இந்திய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா:
இந்தியாவின் 67வது குடியரசு தினத்தையொட்டி, தூதரக உயரதிகாரி ஹேமந்த் கோடல்வார் (Charge d' Affaires Mr. Hemant Kotalwar) அவர்கள் நேற்று
காலை 9 மணிக்கு, ரியாத் இந்தியத் தூதரக வளாகத்தில் கொடியேற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். இந்தியப் பன்னாட்டு பொதுப்பள்ளி மாணவர்கள் தேசப்பற்று பாடல்கள் பாட, மாணவிகள் நடனமாடினர்.
இந்நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு இனிப்புண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.