கடலை கலந்த உணவைச் சாப்பிட்டவர் பலி.. இங்கிலாந்தில் இந்திய ஹோட்டல் அதிபர் மீது புகார்!
லண்டன்: இங்கிலாந்தில் நிலக்கடலை உணவைச் சாப்பிட்டவர் அலர்ஜி காரணமாக பலியான விவகாரத்தில், இந்திய ஹோட்டல் அதிபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஈசிங்வேர்ல்டு என்ற பிரபல மார்க்கெட்டில் இந்தியன் கார்டன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் முகம்மது காலிக் சமான் ( 52). இவர் ஹோட்டல் தொழிலில் சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷயரில் உள்ள திரிஸ்க் என்ற பகுதியைச் சேர்ந்த பால்வில்சன் (38 ) என்பவர், இந்தியன் கார்டன் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அங்கு நிலக்கடலையால் தயாரிக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார் பால்வில்சன். தனது அலர்ஜி நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பால்வில்சன், சிகிச்சைப் பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
இங்கிலாந்தில் ஓட்டல்களில் உணவு சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு அலர்ஜி ஏற்படுவது தொடர்பாக சமீபத்தில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அச்சட்டத்தின் படி, பால்வில்சன் மரணம் தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் முகம்மது காலிக் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உணவக விடுதி உரிமையாளர்கள் மீது இது போன்ற வழக்கு தொடரப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.