இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்ற கரப்பான் பூச்சி.. இந்திய விஞ்ஞானியின் அதிசய கண்டுபிடிப்பு
இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்ற கரப்பான் பூச்சி மூலம் முடியும் என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
நியூயார்க்: இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்ற கரப்பான் பூச்சி மூலம் முடியும் என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவின் உதவியுடன் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி கரப்பான் பூச்சியில் சிறிய சிப்பை பொருத்துவதன் மூலம், இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்ற கரப்பான் பூச்சியை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதை வைத்து இப்போது சோதனை செய்து வருகிறார்கள். கரப்பான் பூச்சி மிக மோசமான சூழ்நிலையில் கூட வாழ கூடியது என்பதால் இதை இந்த பணிக்கு தேர்வு செய்துள்ளனர். இதற்கு சைப்ராக் கரப்பான் பூச்சி என்று பெயர் வைத்துள்ளனர்.
சிப் பொருத்துவார்கள்
நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான சிப் இந்த கரப்பான் பூச்சிகளில் பொருத்தப்படும். இதை வைத்து அந்த கரப்பான் பூச்சியின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பின் அதன்மூலம் இடிபாடுகள் ஏற்பட்டு இருக்கும் இடங்களில் இந்த கரப்பான் பூச்சியை அனுப்பி, மீட்பு பணிகளில் உதவி செய்ய வைப்பார்கள்.
எப்படி இயங்குகிறது
இதில் இருக்கும் சென்சார் ஒன்று, கரப்பான் பூச்சியின் தலை மேல் இருக்கும் கொம்பு போன்ற ஆன்டெனாவில் இணைக்கப்பட்டு இருக்கும். இதில் கொடுக்கப்படும் சிறிய அளவில் மின்சார மாறுபாடுகள் மூலம், அந்த கரப்பான் பூச்சியை நாம் சொல்வதை போல செய்ய வைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். அதாவது இடது பக்கம் திரும்ப ஒரு சிக்னல், வலது பக்கம் திரும்ப ஒரு சிக்னல் என்று இதை இயக்க முடியும் என்கிறார்கள்.
என்ன இருக்கும் அதில்
இந்த சிப்பில் சிறிய ப்ளூ டூத் இருக்கும், இதனால் கரப்பான் பூச்சியை மொபைலை கொண்டே இயக்கலாம். அதேபோல் இதில் சிறிய கேமராவும் இருக்கும். மேலும் ஜிபிஎஸ் இருப்பதால் இது எங்கே இருக்கிறது என்று பார்க்க முடியும். இதனால், இதை மீட்பு பணிகளில் மிகவும் துல்லியமாக பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள்.
எப்படி உதவும்
உதாரணமாக, ஒரு பகுதியில் கட்டிடம் இடிகிறது. அங்கு இடிபாடுகளை சரியாக அகற்ற முடியவில்லை என்றால், உடனடியாக அங்கு நூற்றுக்கணக்கில் இந்த ஸ்பெஷல் கரப்பான் பூச்சிகளை இறக்கிவிட்டுவிடுவார்கள். இது வேகமாக இடுக்குகளில் சென்று உள்ளே சென்றுவிடும். பின் அதிலிருக்கும் கேமரா மூலம் உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வேலையை தொடங்கலாம். மேலும் பாதுகாப்பாக கரப்பான் பூச்சியை மீண்டும் வெளியே வழிகாட்டி கொண்டு வந்து விடலாம்.