மனைவியை கொன்ற இந்தியருக்கு நியூசிலாந்தில் ஆயுள் தண்டனை
வெலிங்டன்: மனைவியை கொலை செய்ததாக நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை அளித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த்துள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வர் சிங் (47 ). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், நியூசிலாந்தில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
1991ம் ஆண்டு சர்வான் லதா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணமானது. இத்தம்பதிக்கு பிறந்த மகன் கடந்த 2011ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தான்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மனைவியை ராஜேஸ்வர்சிங் அடிக்கடி அடித்து உதைப்பது வழக்கமாம். இதுதொடர்பாக 9 முறை காவல் நிலையத்தில் சர்வான் லதா புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஸ்வர் சிங்கிற்கு கடந்த மாதம் ஜாமீன் அளித்து அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டது.
ஜாமீன் அளித்தபோதே, மனைவியை சந்திக்க கூடாது, அவர் இருக்கும் வீட்டுப்பக்கம் போக கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை காதில் போட்டுக்கொள்ளதாக ராஜேஸ்வர் சிங் மனைவி இருந்த வீட்டுக்கு சென்று அவரை குத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து கொலை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியது ஆகிய பிரிவுகளின்கீழும் ராஜேஸ்வர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் விசாரணை நடத்திய வெலிங்டன் நீதிமன்ற நீதிபதி ரொனால்ட் யங், மனைவியை கொலை செய்த ராஜேஸ்வர்சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.