சவுதியில் மரணம் அடைந்த தமிழரின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்த ஐஎஸ்எஃப்
ரியாத்: சவுதியில் மரணம் அடைந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவரின் உடலை இந்தியன் சோஷியல் ஃபோரம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்த ஜெயசேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் தனது மனைவி ஷீலாரஞ்சனி, மகள் ஆஷா பிரியதர்ஷினி ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டபட்டு வந்தவரை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17.12.2016 அன்று ஜெயசேகரன் மரணமடைந்தார்.
கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நலத்துறை நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
தொடர் முயற்சியின் பலனாய் 29-2-2016 அன்று ஜெயசேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் திருவனந்தபுரம் எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.