பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய தூதரக அதிகாரிகளின் உடலில் படுகாயங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரின் உடலில் படுகாயங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் பணியாற்றிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அபித் ஹூசைன், தாஹிர் கான் இருவரும் உளவு பார்த்தனர் என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதனால் இருவரும் பாகிஸ்தானுக்கே நாடு கடத்தப்பட்டனர்.
இதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவை சீண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதர் அலுவாலியாவை தாங்கள் உளவு பார்க்கிறோம் என கிண்டலடித்து பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டது.
இப்படி இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் அதிகரித்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள் இன்று காலை முதல் மாயமாகினர். சுமார் 7 மணிநேரத்துக்குப் பின்னர் இரு இந்திய தூதரக அதிகாரிகளையும் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் கைது செய்த 2 இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு: உடலில் காயங்கள்
பின்னர் இரு இந்திய அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்லாமாபாத் தலைமை செயலகக் காவல் நிலைய போலீசிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தான் கைது செய்து விடுவித்த இரு இந்திய அதிகாரிகளும் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரது உடலிலும் காயங்கள் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்திய அதிகாரிகளை பாகிஸ்தான் கைது செய்து தாக்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.