பாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி... ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்!
ஆஸ்திரேலியாவில் செல்பி எடுக்க முயற்சித்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் செல்பி மோகத்தால் இந்திய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வருகிறார் இந்தியாவைச் சேர்ந்த அங்கித்(20) என்ற மாணவர். விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது நண்பர்களுடன், மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான அல்பானிக்கு அருகே 'தி கேப்’ என்னும் 40 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். உலகின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தானது.
நண்பர்களுடன் மலையின் மேலே சென்ற அங்கித், அங்கிருந்த பாறைகளில் தாண்டிச் சென்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அவர் கடலில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கித் உடலை நீரில் இருந்து மீட்டனர்.
மாணவனின் நண்பர்கள் கூறுகையில், “அவன் மிகுந்த கவனமாகத்தான் செல்பி எடுத்தான். ஆனால் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரை இழந்துவிட்டான்” என்று சோகத்துடன் கூறினர்.
செல்பி மோகத்தால் ஏற்பட்ட அங்கித்தின் மரணத்தால் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அங்கித் உயிரிழந்த பகுதி மிகவும் ஆபத்தானது. இது பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.