நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழ் மாணவர்- இளம்பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த பரிதாபம்
மெல்போர்ன்: நியூசிலாந்து கடலில் விழுந்து தத்தளித்த போது, இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி என்ற தமிழக்கத்தைச் சேர்ந்த மாணவர் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர், நியூசிலாந்தில் ஈஸ்ட்போர்ன் என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து விட்டார். நீச்சல் தெரியாததால் தத்தளித்தார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்காவ் மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் ஆகியோர் (இருவரும் ஒன்றுவிட்ட சகோதரிகள்) அவரது அலறல் சத்தத்தை கேட்டனர்.
உடனே, பாய்கே ஓல்ட்ஸ் கடலில் குதித்து பழனி தத்தளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு விரைந்தார். அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி காட்டினர். பாய்கே ஓல்ட்ஸ், மிகவும் ஆழத்தில் நீந்திச் சென்று பழனியை கண்டுபிடித்தார். அப்போது, பழனி நன்றாக மூழ்கிவிட்டார். இருப்பினும் அவரை பெரும் சிரமப்பட்டு பாய்கே மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
கரையில், பழனிக்கு கெல்லி மெக்காவ் முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர், பழனியை வெலிங்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார்.