பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய இந்திய இளைஞர் இங்கிலாந்தில் தஞ்சம்
லண்டன்: பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஹைதராபாத் வாழிபர், தனது தோழியுடன் வாழ்வதற்கு இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டு கத்துக் கொண்டிருக்கிறார்.
ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் பெண்ணாகவே பிறந்து, வளர்ந்தவருக்கு ஹார்மோன் மற்றும் குரோமோசோம்களின் கிளர்ச்சியால் ஆணாக வாழ விரும்பினார். வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த தோழியிடம் மன வேதனைகளைக் கொட்டித் தீர்த்த அவர், தோழியுடன் துணையுடன் ஆணாக ஆபரேஷன் மூலம் தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆணாக மாறிய அவர் தன் பெயரை சமீர் நீலம் என மாற்றிக் கொண்டு, குடும்பத்தை விட்டு வெளியேறி தன் தோழியுடன் குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளார்.
மீடியாக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது சமீர் மற்றும் அவரது தோழியின் குடும்ப வாழ்க்கை. இதனால் சமூகத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான சமீர் நீலம், 'நான் நானாகவே இருப்பேன், அதுவும்..ஆணாகவே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
ஆனாலும், இந்தியாவில் தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் என எண்ணிய சமீர், வேறு எந்த நாட்டுக்காவது போய் தோழியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன்படி, பாலியல் பேதங்களுக்காக சொந்த நாட்டில் புறக்கணிக்கப்படும் பாலினம் மாறிய மக்களுக்கு இங்கிலாந்தில் தாராளமாக வசிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிந்த சமீர் நீலம், தற்போது வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்டில் வாழ அனுமதி கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார்.
'இங்கே இருக்கும் போது நான் ஒரு ஆணாக மதிக்கப்படுகிறேன். இந்தியாவுக்கு போனால் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். என்னை ஒதுக்கி வைத்து கொடுமைப் படுத்துவார்கள். ஏன்..? ஒழித்து கூட விடுவார்கள்' என சமீர் நீலம் தெரிவித்துள்ளார்.