அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை... கொள்ளையர்கள் அட்டகாசம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொள்ளை முயற்சியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் தாராப்பூரைச் சேர்ந்தவர் மிர்துளாபென் பட்டேல் என்ற 60 வயது பெண். இவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் கேஸ் கடை ஒன்றை இன்னொருவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
கடந்த வியாழனன்று பணியில் இருந்த மிர்துளாவை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த மிர்துளா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொள்ளை முயற்சியின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது இனவெறி தாக்குதல் இல்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொலை நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மிர்துளாபென் பட்டேல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குடியுரிமைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.