8 மாதமாக மொட்டை மாடியில் வசித்து வரும் இந்தியர்.. வளைகுடாவில் ஒரு கண்ணீர்க் கதை
அஜ்மானில் கடந்த எட்டு மாதமாக இந்தியத் தொழிலாளர் ஒருவர் தாயகம் திரும்பமுடியாமல் மொட்டை மாடியில் தங்கியிருக்கிறார்.
துபாய்: அஜ்மானில் இந்தியர் ஒருவர் கடந்த மாதமாக மொட்டை மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது உரிமையாளர் பாஸ்போர்ட்டைத் திரும்பத் தராததால் இந்த அவல நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்தத் தொழிலாளியின் அவலம் குறித்து கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்களில் பலரும் பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர். சரியான சம்பளம் தரப்படாதது உள்ளிட்ட பல்வேறு கஷ்டங்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் அஜ்மானில் ஒரு இந்தியத் தொழிலாளர் கடந்த எட்டு மாதமாக மொட்டை மாடியில் தங்கியிருக்கும் சோகக் கதை வெளியாகியுள்ளது.
கேரளத்து சஜீவ் ராஜன்
அந்த இந்தியரின் பெயர் சஜீவ் ராஜன். இவருக்கு ஒரு கண் மட்டுமே பார்வையுடன் உள்ளது. 40 வயதாகும் இவர் ஷார்ஜாவைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திற்காக வேலை பார்த்து வந்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். மனைவி, 2 குழந்தைகள், வயதான தாய் தந்தை ஊரில் உள்ளனர்.
மார்ச் முதல்
இவர் ஒரு எலக்ட்ரீசியன். கடந்த மார்ச் மாதத்துடன் இவரது ஒப்பந்தம் முடிந்தது.அதன் பின்னர் இவர் இந்தியா திரும்ப விரும்பினார். இவரது மாதச் சம்பளம் 245 டாலர் மட்டுமே. அது போதுமானதாக இல்லாததால் ஒப்பந்தத்தை நீட்டிக்க இவர் விரும்பவில்லை. ஆனால் இவரது உரிமையாளர் பாஸ்போர்ட்டைத் தர மறுத்து விட்டார்.
அலைச்சல்தான் மிச்சம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அன்று முதல் தொடர்ந்து தொழிலாளர் கோர்ட், இந்தியத் தூதரகம் என அலைந்து கொண்டிருக்கிறார். எங்குமே இவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. அன்று முதல் ஒரு ஆறு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில்தான் தங்கியுள்ளார். இவரது சோக நிலையைக் கண்டு அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் சாப்பாடு உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி வருகின்றனராம்.
கை கொடுக்க ஆள் இல்லை
இதுகுறித்து ராஜன் கூறுகையில், என்னிடம் சாப்பிடக் கூட பணம் இல்லை. ஒரு ஹோட்டல் உரிமையாளர் சாப்பாடு கொடுத்து உதவுகிறார். இன்னொருவர் தினசரி 3 திர்ஹாம் பணம் கொடுக்கிறார்.அதை வைத்து காலைச் சாப்பாடு சாப்பிடுகிறேன். இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை என்றார் ராஜன்.
விரைவில் நியாயம் கிடைக்கும்
இவரது நிலையை அறிந்த கலீஜ் டைம்ஸ் இதழ் விரிவான செய்தி வெளியிட்டது. இதையடுத்து ராஜனுக்கு தற்போது உதவிகள் குவிந்து வருகினறன. இந்திய தூகரகமும் மனம் இறங்கி இவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாம்.
படங்கள்: Kuwait-தமிழ் பசங்க