மோசம்.. இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் சாதியை கொண்டு வந்துவிட்டனர்.. குமுறும் அமெரிக்கர்கள்!
இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் சாதியை கொண்டு வந்துவிட்டனர் என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்: இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் சாதியை கொண்டு வந்துவிட்டனர் என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே இந்தியாவில்தான் சாதிய ரீதியான அடக்குமுறைகள் அதிகம் இருக்கிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்குள் பாகுபாடு இருந்தாலும், இந்தியாவில் இந்துக்கள்தான் அதிக அளவில் ஜாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சாதியை ஆதரிக்கும் இந்துக்கள், அமெரிக்கவிற்கும் அதை ஏற்றுமதி செய்து இருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர் செய்த கணக்கெடுப்பின் படி இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்க சட்டம் எப்படி
அமெரிக்காவில் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்து வந்தனர். அதை தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பது போல ரிசர்வேஷன் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு சட்டத்தில் ஜாதி குறித்து வரையறை எதுவும் இல்லை. கறுப்பின மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பதை போன்ற சட்டங்கள் அங்கே சாதிக்காக இல்லை.
எழுதியுள்ளார்
இந்த நிலையில்தான் கென்னத் ஜெ கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் ''தி வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிக்கையில் அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த ஜாதி குறித்து கட்டுரை எழுதியுள்ளார். இந்தியர்கள் அமெரிக்காவில் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் ஜாதியை கடைபிடிக்கிறார்கள் என்று எழுதி விலாவாரியாக தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
எதை வைத்து
இந்த கட்டுரையை அவர் எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர் செய்த கணக்கெடுப்பின் படி எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் அவர்களின் ஜாதிய பழக்கவழக்கங்கள் குறித்து இவர்கள் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். அதேபோல் பட்டியலின சாதியினர் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். இதை வைத்தே இவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
ஒடுக்குமுறை
அதன்படி 3ல் இரண்டு பட்டியலின சாதியினர் தாங்கள் ஒடுக்குமுறைகளை சந்திக்கிறோம், பிறசாதி இந்திய இந்துக்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுகிறார்கள் என்றுள்ளனர். சிறுவர்கள் பள்ளியிலும் இது நடக்கிறது என்று கூறியுள்ளனர். அலுவலகம், வேலைக்கு வெளியே, திருமணம் ஆகிய விஷயங்களில் கூட இப்படி நடப்பதாக இவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த விஷயம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கென்னத் ஜெ கூப்பர் தெரிவித்துள்ளார்.
மறைவு வாழ்க்கை
அதேபோல் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைபிடிக்கும் ''பாஸ்ஸிங் (passing)'' என்று அழைக்கப்படும், மறைந்து வாழும் முறையை இந்த பட்டியலின மக்களும் கடைபிடிப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது மேல்சாதி இந்துக்களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் சாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கென்னத் ஜெ கூப்பர் எழுதியுள்ளார்.
படித்தவர்கள்தான்
முக்கியமாக மேல் சாதி இந்துக்களை விட இவர்கள் அதிகம் படித்து இருந்தாலும் (அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் மேல்சாதி என்ற அழைக்கப்படும் சாதியை சேர்ந்த நபர்களை விட பட்டியலின சாதியினர் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக்கிறார்களாம் ) ஜாதி ஒடுக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுதான் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கென்னத் ஜெ கூப்பர் எழுதியுள்ளார்.
ஆச்சர்யம் அளிக்க கூடிய விஷயம்
மேலும் இந்தியாவில் உள்ள ரிசர்வேஷன் எனப்படும் இடஒதுக்கீடு முறையே இந்த நல்ல விஷயத்திற்கு காரணம், இது இல்லையென்றால் பட்டியலின சாதியினர் கல்வி இல்லாமல் இன்னும் அதிக ஒடுக்குமுறையை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எழுதியுள்ளார். இந்தியா ஜாதி முறை பற்றி அமெரிக்க பள்ளியில் எச்சரிக்கை வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
வழக்கு தொடுக்க உள்ளேன்
மேலும் கறுப்பின மக்கள் கூட இப்படி மறைமுக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. இது மிகவும் மோசமாக இருக்கிறது. இதை மொத்தமாக ஒடுக்கவே இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். மேலும் இதுகுறித்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளேன் என்றும் கென்னத் ஜெ கூப்பர் எழுதியுள்ளார்.