குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திரதின கொண்டாட்டம்: 10 ஆயிரம் இந்தியர்கள் குவிந்தனர்
குவைத்: இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை குவைத்திலுள்ள இந்தியர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
குவைத்தில் பணிநிமித்தமாக சென்ற இந்தியர்கள் பலர் உள்ளனர். இந்தியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இந்தியாவுக்கான தூதர் சுனில் ஜெயின் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை சுனில் ஜெயின் அப்போது படித்து காண்பித்தார். மேலும், வரலாற்று ரீதியாக இந்தியா மற்றும் குவைத் நடுவே இருக்கும் நெருக்கத்தை சுனில் அப்போது சுட்டிக்காண்பித்து பேசினார்.
குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தில் கலை, கலாசார நிகழ்ச்சிகளை இந்தியர்கள் நிகழ்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுல்ளது என்றும் சுனில் தெரிவித்தார். இதையடுத்து கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேறின.
தேசிய கீதம் பாடப்பட்டது. காந்திபோல வேடமிட்டும், பாரத தாய் போல வேடமிட்டும் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக இளம் வயதினர் அதிகம் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்தியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்று அசத்தினர்.
குவைத் நாட்டில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாகவும், வர்த்தகம், மருத்துவம், இன்ஜினியரிங், தொழிலாளிகள் என பல துறைகளில் இந்தியர்கள் பங்களிப்பு உள்ளதாகவும் அந்த நாட்டு புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.