குவைத்தில் இந்தியர்களுக்கு சிக்கல்.. குடியேற்ற மசோதா சட்டமானால் 8 லட்சம் பேர் வெளியேற்றப்படலாம்!
குவைத் சிட்டி: அமெரிக்காவை அடுத்து குவைத்தும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீத இந்தியர்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சிறப்பு கமிட்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.
''வெளிநாட்டினர் குடியுரிமை ஒதுக்கீட்டு வரைவு நகல் மசோதா''வுக்கு குவைத் நாட்டின் சட்டம் மற்றும் நாடாளுமன்ற கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரைவு நகல் சட்டமாகும் பட்சத்தில் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த வரைவு நகலின்படி குவைத்தில் தற்போது இருக்கும் இந்தியர்களில் 15 சதவீதம் பேர் மட்டும் இருக்க முடியும். மற்றவர்கள் குறித்த விவரங்கள் விரிவான கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முடிவு செய்யப்படும் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.
குவைத்தின் மொத்த மக்கள் தொகை 48 லட்சம். இவர்களில் 14 லட்சம் பேர் இந்தியர்கள். குவைத்தில் இருக்கும் மற்ற நாட்டினரில் இந்தியர்கள்தான் அதிகம். இந்தியர்களை அடுத்து எகிப்து மக்கள் அதிகளவில் உள்ளனர். இந்தியர்களைப் போலேவே மற்ற நாட்டினரும் அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தில் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற நாட்டினரை விட குறைவாக உள்ளனர். இந்த நிலையை போக்குவதற்கு இந்த முடிவை எடுத்து இருப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று துவங்குவதற்கு முன்பு இருந்தே அந்த நாட்டில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற குரலை அரசு ஊழியர்கள், சட்ட வல்லுநர்கள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் வரைவு நகலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபாவும் இந்த வரைவு நகலை முன்மொழிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குவைத் மக்கள் 70%மும், வெளிநாட்டினர் 30%மும் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு
இதுகுறித்து இந்தியா இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. குவைத் நாட்டுக்கான இந்திய தூதரகம் இதுகுறித்து ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது. குவைத்தில் இருக்கும் இந்தியர்கள் மிகவும் ஒழுக்கமான முறையில், கடினமான முறையில் உழைத்து, சட்டத்திற்கு உட்பட்டு வசித்து வருகின்றனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருமானம் கிடைக்கும் நாடுகளில் குவைத்தும் ஒன்று. 2018ஆம் ஆண்டில், குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு பணமாக 4.8 பில்லியன் டாலர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.