ஐ.நா சபையின் சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பிடித்த முதல் இளம் இந்தியர்
ஐ.நா சபைக்கான சட்ட வல்லுநர்கள் குழுவுக்கு முதல் முறையாக இந்திய இளம் வழக்கறிஞர் அனிருத்தா ராஜ்புட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க் : ஐ.நா சபையின் சட்ட வல்லுநர்கள் குழுவில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பில் இந்திய வழக்கறிஞர் அனிருத்தா ராஜ்புட் வெற்றி பெற்றார்.
சர்வதேச சட்ட நிபுணர்கள் தொடர்பான வழக்குகளை கவனிக்க சுழற்சி முறையில் 34 புதிய பிரதிநிதிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா -கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அப்பகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் இதற்கான ரகசிய வாக்குபதிவு நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் வழக்கறிஞரான அனிருத்தா ராஜ்புட் மிக அதிகமாக 160 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஐ.ந சபையின் சட்ட நிபுணர்கள் குழுவில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
33 வயதான அனிருத்தா ராஜ்புட் 34 உறுப்பினர்கள் கொண்ட சட்ட வல்லுநர்கள் குழுவில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இவர்கள் அனைவரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.
முதல் முறையாக இந்திய வழக்கறிஞர் ஒருவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா சபைக்கான நிரந்தர உறுப்பினர் சையது அக்பரூதின் பாராட்டு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வந்த அனிருத்தா ராஜ்புட் சட்ட அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு தேர்தலில் பங்கேற்றார்.