கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது!
லாஸ்ஏஞ்சல்ஸ் : கொரோனா பயத்தால் வீட்டிற்கு செல்வதற்கு பயந்து இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி பதுங்கி இருந்ததற்காக அந்த நபரை அமெரிக்க போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அமெரிக்க வாழ் இந்தியரான ஆதித்யா சிங், 35 வயது. லாஸ்ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் வசித்து வருகிறார். மருத்துவமனை மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ள ஆதித்யா, வேலைக்கு முயற்சித்து
இந்நிலையில் ஊர் திரும்புவதற்காக சிகாகோ ஓ ஹாரி சர்வதேச விமான நிலையதத்திற்கு சென்றுள்ளார். ஆனால் கொரோனா பயத்தால் விமானத்தில் பறக்கவும், வீட்டிற்கு செல்லவும் யோசித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் 2020 ம் ஆண்டு அக்டோபர் 19 தேதியில் இருந்து 2021 ஜனவரி 16 ம் தேதி வரை, விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் மண்ணை துவி பதுங்கி இருந்துள்ளார்.
ஜனவரி 16 அன்று தான் விமான நிலைய அதிகாரிகள் ஆதித்யாவை கண்டுபிடித்து, அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் ஆதித்யா அவர்களிடம், 3 மாதத்திற்கு முன் விமான நிலைய செயல்பாட்டு அதிகாரி ஒருவர் தொலைத்த அடையாள அட்டையை காட்டி உள்ளார். அவர் காட்டிய அடையாள அட்டை அவருடையது இல்லை என கண்டறிந்த அதிகாரிகள், ஆதித்யாவை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்க போலீசாரும் ஆதித்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு விபரத்தை கேட்டு குழப்பமடைந்த நீதிபதி சூசானா ஆர்டிஜ், விமானநிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் எவ்வாறு தனிநபர் ஒருவரால் நுழைய முடியும். இது விமான நிலைய பாதுகாப்பு பற்றி மக்களிடம் உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த சிகாகோ விமான போக்குவரத்து துறை, இது பற்றி விசாரணை நடத்தப்படும். பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் கண்டறியப்பட்டு, நீக்கப்படும் என்றனர்.
அத்துமீறி விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்து, விமான நிலைய அதிகாரியின் அடையாள அட்டையை திருடியது போன்ற குற்ற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆதித்யாவிற்கு 1000 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரை ஜனவரி 27 அன்று ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.