போதைப் பொருள் கடத்தல்: இந்தோனேசியாவில் தமிழர் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாலி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஈழத் தமிழர் உள்பட 8 பேரை சுட்டு இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ சான், ஆஸ்திரேலிய வாழ் ஈழத் தமிழரான மயூரன் சுகுமாறன் பாலியில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளித்தது.
இதையடுத்து அந்த இருவரும் அதிபர் விடோடோவுக்கு கருணை மனு அனுப்பினர். அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்ட்ரூ சான், சுகுமாறன், நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் ஆகிய 8 பேருக்கு புதன்கிழமை அதிகாலை நுசகம்பங்கன் தீவில் உள்ள பேசி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த 8 பேரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேரி ஜேன் பீஸ்டா வெலோசோவுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேரியை யாரோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேண்டும் என்றே சிக்க வைத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்ததன் பேரில் அவரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.