வெடிகுண்டு பீதி... 122 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய இந்தோனேஷிய விமானம்!
ஜகார்த்தா: விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, 122 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேஷிய விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் அம்பன் விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் பதிக் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம் ஜகர்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானம், அவசரமாக மகசார் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
பின்னர் விமானம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தகவல் தவறானது என தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து இந்தோனேஷிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு தகவல் காரணமாக விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் பீதிக்கு ஆளானார்கள். இந்த சம்பவத்தால் மகசார் விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.