எச்சரிக்கையை திரும்ப பெற்ற பிறகு ஆர்ப்பரித்த சுனாமி.. சரியாக கணிக்கவில்லை... மக்கள் ஆவேசம்!
பலு, சுலவேசி: இந்தோனேசியாவின் பலு நகரை புரட்டிப் போட்ட சுனாமியை இந்தோனேசிய பேரிடர் துறையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை அல்லது சுனாமி குறித்த முன்னெச்சரிக்கையில் அவர்கள் தவறி விட்டனர் என்றுதான் கூற வேண்டும். காரணம், சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்ற சில மணி நேரங்களில் சுனாமி தாக்கியுள்ளது.
இநதோனேசியாவின் சுலவேசி மாகாணத்தின் பலு கடற்கரையோர நகரை நேற்று தாக்கிய சுனாமிக்கு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கடற்கரைப் பகுதியையே சுனாமி புரட்டிப் போட்டு விட்டது.
பாழாய் போனது
முன்னதாக 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் பேரிடர் நிர்வாக ஏஜென்சி உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இந்த வாபஸுக்கு சில மணி நேரங்கள் கழித்து பலு நகரை சூறையாடி விட்டது சுனாமி. கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்தில் எழுந்து வந்த சுனாமி அலைத் தாக்குதலால் பலு நகரம் பாழாய்ப் போனது.
அக்னி வளையம்
சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்போதுதான் பொதுவாக சுனாமி தாக்குதல் ஏற்படும். குறிப்பாக கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அலைத் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது. இந்தோனேசிய கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் வருவது சகஜம். அக்னி வளையம் எனப்படும் Pacific Ring of Fire பிராந்தியத்தில் இந்தோனேசியா உள்ளது.
சுனாமி தாக்கியது
உலகில் நிகழும் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்தோனேசியாவில்தான் ஏற்படுகின்றன. காரணம் இந்தப் பிராந்தியத்தின் நிலத்தட்டுக்கள் அப்படி. ஆனால் நேற்றைய சம்பவம் யாரும் எதிர்பாராதது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வழக்கமாக விடுவது போல சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டது. அது நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுனாமி தாக்கியதால் இந்தோனேசியா அதிர்ந்து போனது.
சரியாக கூற இயலாது
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் பாப்டிஸ்ட் கோம்பெர்ட் கூறுகையில், இது உண்மையில் பெரிய சர்ப்பிரைஸ். யாரும் எதிர்பாராத நிகழ்வு. இந்தோனேசியாவின் நிலப்பரப்பு மிகவும் சிக்கலானது. இதில் கணிப்பு சரியாக போகாவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் நடந்துள்ளது. கணிப்பு சரியானது என்று கூறவும் முடியாத நிலை.
சுனாமிக்கு வாய்ப்பு
நிலத்தட்டுக்களின் உராய்வு மற்றும் நகர்வை வைத்துத்தான் பெரும்பாலும் சுனாமி வருமா வராதா என்பதை கணிப்பார்கள். வழக்கமாக படுக்கைவாக்கில் நிலத்தட்டுக்கள் நகர்ந்தால் சுனாமி வர வாய்ப்பில்லை. நீள வாக்கில் நகரும்போதுதான் சுனாமிக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று இது தலைகீழாக மாறியுள்ளது. இது நிச்சயம் சற்று பெரிய சுனாமிதான்.
மலைகளுக்கு செல்ல வேண்டாம்
இதற்கிடையே, மக்கள் தொடர்ந்து உஷாராக இருக்குமாறு இந்தோனேசிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாதுக்காப்பான இடங்களில் மக்கள் தொடர்ந்து தங்கியிருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்தோனேசிய பேரிடர் முகமமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ கூறுகையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றார்.