கடலில் தத்தளிக்கும் 7000 முஸ்லீ்ம்களுக்கும் தற்காலிக அடைக்கலம்: மலேசியா, இந்தோனேசியா முடிவு!
கோலாலம்பூர்: நடுக்கடலில் அகதிகளாக தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியா, இந்தோனேசியா நாடுகள் முடிவு செய்துள்ளன.
மியான்மர் உள்நாட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ரோங்கியா முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.
இதேபோல் வங்கதேசத்தில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் நூற்றுக் கணக்கான ரோங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க எந்த நாடும் முன்வராததால் அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இரு பெரிய படகுகளில் புறப்பட்ட மியான்மார் நாட்டவர் மலேசியாவுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை மலேசியக் கடற்படையினரும் பின்னர் தாய்லாந்து கடற்படையினரும் விரட்டியடித்தனர். இதனால், அந்தமான் கடல் பகுதிக்கு சென்று அங்கும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், உண்ண உணவும், குடிக்க நீரும் இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டு எல்லையருகே நடுக்கடலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் பற்றி ஆலோசிக்க மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டம் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் படகுகளில் தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் ஒருவரை கூட தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என தீர்மானமாக தெரிவித்துவிட்ட தாய்லாந்து நாட்டு அமைச்சர், கடலில் காத்திருப்பவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.