கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானத் தேடலை நிறுத்திய இந்தோனேசிய ராணுவம்
ஜகர்தா: ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது தெரிய வந்தது.
இதையடுத்து கடலில் விழுந்த விமான பாகங்கள், பயணிகளின் உடல்களை தேடும் பணி நடந்தது.
கருப்பு பெட்டி
விமானம் விழுந்த இடத்தில் இந்தோனேசிய ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டது. விமானத்தின் கருப்பு பெட்டிகள், வால் பகுதி உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன.
உடல்கள்
விமானத்தில் பயணம் செய்த 162 பேரில் 70 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
ராணுவம்
ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது. அதே சமயம் பயணிகளின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள்
மீட்பு பணியில் ஈடுபட்ட 81 கடற்படை வீரர்களில் 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அயராது கடலுக்கு அடியில் சென்று பாகங்கள் மற்றும் உடல்களை தேடியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜகர்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம்
கடந்த வார இறுதி நாட்களில் விமானத்தின் உடல் பகுதியை வீரர்கள் கயிறுகள் மற்றும் ராட்சத பலூன்கள் மூலம் கடலில் இருந்து எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.