இந்தோனேசிய விமான விபத்து: 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள்.. 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கண்டெடுப்பு
ஜகார்த்தா: இந்தோனேசிய விமான விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 5 மூட்டைகளில் உடல் உறுப்புகளும் 10 மூட்டைகளில் விமான பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. தரை கட்டுப்பாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
மாயமான விமானம் ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஆகும். இந்த நிலையில் விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
ஜஸ்ட் 4 நிமிடம்தான்.. எல்லாம் போச்சு.. மாயமான இந்தோனேஷியா விமானம் பற்றி பரபரப்பு தகவல்
மீனவர்
இந்த விமானத்தின் தகவல் பதிவு பெட்டியிலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. ராணுவ கப்பல்கள் மூலம் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜகார்த்தா வடக்கு பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமான பாகங்கள் கிடப்பதாக மீனவர் ஒருவர் தகவல் கொடுத்தார்.
சில பாகங்கள்
அதன் அடிப்படையில் தேடும் பணியில் ஈடுபட்ட போது சில பாகங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விமானத்தில் 62 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ் , இரும்பு பாகங்கள் கிடைத்தன. சிலரது உடல் பாகங்களும் கிடைத்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள் கிடைத்துள்ளன. அது போல் 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த உடல்கள், உறுப்புகளை வைத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் பயணிகளின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
கடும் மழை
இந்த விமான பாகங்கள் லகி தீவுக்கும் லான்காங் தீவுக்கும் இடையே கிடைத்தது. 28 கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள், இரு விமானங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முத்துகுளிக்கும் வீரர்கள் கடலில் மூழ்கி ஏராளமான விமான பாகங்களை எடுத்து வருகிறார்கள். இதுவரை விமானத்தின் பதிவு எண் பிளேட், சக்கரங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. கடல் நீர் கொந்தளிப்பின்றி தெளிவாக இருப்பதால் சிதைவுகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாக உள்ளதாக கூறுகிறார்கள். விமானம் மோசமான வானிலை காரணமாகவும் புறப்பட்ட போது கடும் மழை பெய்ததாலும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அசைப்பு
விமானத்தில் பயணித்தவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளவாசிகள் பரப்பி வருகிறார்கள். அதில் ஒரு வீடியோவில் ஒரு பெண்ணும் அவருடைய குழந்தைகளும் விமான நிலையத்தில் நடந்து சென்ற போது கையை அசைக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.