இந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பணிச்சுமையால் 270 தேர்தல் அலுவலர்கள் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் முறையாக இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலுக்காகும் இரட்டிப்பு செலவை கருத்தில் கொண்டு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 19.3 கோடி வாக்காளர்கள் 8 லட்சம் வாக்குச் சாவடி மையங்களில் தலா 5 வாக்குச் சீட்டுகளை முத்திரை குத்தினர்.
இந்த 8 மணி நேர வாக்குப் பதிவுக்கு வாக்குச் சீட்டுகளை கைகளால் எண்ணுவதற்கு தேர்தல் அதிகாரிகள் ஆயத்தமாகினர். இவர்களில் சனிக்கிழமை நிலவரப்படி 272 தேர்தல் அலுவலர்கள் பலியாகிவிட்டனர். 1,878 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.
முழுக்க முழுக்க தேர்தல் பணிச்சுமையால் ஏற்பட்ட சோர்வு காரணமாக இவர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி சுகாதார துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை கொடுக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.