நிலநடுக்க அதிர்ச்சியை விட சுனாமி பீதியில் உறைந்த இந்தோனேசியா மக்கள்
சுமத்ரா: இந்தோனேசியாவில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட சுனாமி வரப் போகிறது என்ற எச்சரிக்கைதான் மக்களை உறைய வைத்து விட்டது. காரணம், 2004ம் ஆண்டு தாக்கிய சுனாமியின் பாதிப்பை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இந்தோனேசியாவில், சுமத்ரா அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6.50க்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. ஆனால் சுமத்ராவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமத்ரா, மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, அசே ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. படாங் பகுதியில்தான் சேதம் அதிகம் என்று
தகவல்கள் கூறுகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறி ஓடினர். பலர் தெருக்கள், சாலைகளில்கூடி நின்றனர். சுனாமி பீதியும் அவர்களை அலைக்கழித்தது.
நிலநடுக்கத்தை விட சுனாமி எச்சரிக்கைதான் மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் இந்தோனேசியாவைப் புரட்டிப் போட்டு விட்டது. அந்த சுனாமியில் இந்தோனேசியாவில் மட்டும் 1.70 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்தியா வரை பலலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.