“நெருப்பு வளையம்” இந்தோனேஷியாவில் நெருப்பை கக்கிய எரிமலை– 11 பேர் காயம்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் வடக்கு மலுக்கு பகுதியின் கமலாமா மலையில் அமைந்துள்ள எரிமலை ஒன்று நேற்று மாலை வெடித்துச் சிதறியது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அரசு உத்தரவிட்டது. மலையில் வசித்து வந்த 11 பேர் சரிவில் இறங்கி வரும்போது காயமடைந்தனர்.
3 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5630 அடி உயரம் கொண்ட எரிமலையின் உச்சியிலிருந்து இன்று வரை 600 அடி உயரத்திற்கு புகை வெளியேறிய வண்ணம் இருக்கிறது.
வெளியேறும் புகையால் விமான ஓட்டிகளுக்கு விமானம் ஓட்டுவதில் இடையூறு ஏற்படும் என்பதால் டெர்னேட் நகரத்தில் உள்ள அந்நாட்டின் பாபுலா விமான நிலையம் இன்று காலை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
வேறு எந்த பாதிப்பும் இல்லையென்றால் நாளை விமான நிலையம் திறக்கப்படும் என போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் பரதா தெரிவித்துள்ளார்.