இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது செயலிழந்த சுனாமி எச்சரிக்கை கருவிகள்
ஜகார்தா: இந்தோனேசியாவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுனாமி எச்சரிக்கை விடும் கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடந்த புதன்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலநடுக்கம் 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சுமத்ரா தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2 மணிநேரம் கழித்து எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி எச்சரிக்கை விடுவது வழக்கம். அதன்படியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் சுனாமி எச்சரிக்கை விடும் கருவிகள் அனைத்தும் புதன்கிழமை வேலை செய்யவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். கருவிகள் வேலை செய்யாததால் தான் சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற காலதாமதமாகியுள்ளது.
பழுதாகியுள்ள கருவிகள் சரி செய்யப்படும் என்றும், உடைந்த கருவிகளுக்கு பதில் புதுக் கருவிகள் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.