ரூ.9000 கோடி மோசடி... கைதான சில நிமிடங்களில் தொழிலதிபர் மல்லையாவுக்கு மீண்டும் ஜாமீன்
ரூ.9000 கோடியை வங்கிகளில் கடனாக பெற்ற வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன்: இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடின. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையா கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி லண்டன் ஸ்காட்லார்ந்து போலீஸார் கைது செய்தனர். லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சில மணி நேரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லண்டன் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த முறையும் மல்லையா கைது செய்யப்பட்ட சில நேரங்களில் பிணை பெற்றதுபோல் இந்த முறையும் கைது செய்யப்பட்டவுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.