கருப்பு பணம் பதுக்கிய மேலும் 5 இந்தியர்கள் பெயர் விவரம் வெளியீடு!
பெர்னே: சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதாக பிரபல தொழில் அதிபர் யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. இதன்மூலம் கடந்த இரு நாட்களில் இந்தியர்கள் 7 பேரின் பெயரை சுவிஸ் வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு.
இதில் இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பதை சேர்ந்த யாஷ் பிர்லாவின் பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அப்பட்டியலில் டெல்லியை சேர்ந்த குருஜித் சிங், ரித்திகா சர்மா, சையது முகமது மசூத் மற்றும் அவரது மனைவி சந்த் கவுசர் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நேற்று சுவிஸ் வெளியிட்டிருந்த பட்டியலில் டெல்லியை சேர்ந்த பெண்களான லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. எனவே இந்தியர்களின் பட்டியல் 7ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும், தங்களை பற்றி விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என விரும்பினால் அடுத்த 30 நாட்களுக்குள்ளாக சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.