தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு பிரஸ்ஸல்ஸில் இன்போசிஸ் ஊழியர் மாயம்
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் நகரில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததில் இருந்து அங்கு பணிபுரியும் இன்போசிஸ் நிறுவன ஊழியரான பெங்களூரை சேர்ந்த ராகவேந்திர கணேசனை காணவில்லை.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வேலை பார்த்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திர கணேசன். பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு கணேசனை காணவில்லை.
அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று மாலையில் இருந்து அவரை தொடர்பு கொள்ள அவரது நண்பர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். ஆனால் கணேசன் எங்கு உள்ளார், அவருக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
We are doing our best to locate Raghavendran Ganesh. /2
— Sushma Swaraj (@SushmaSwaraj) 23 March 2016
ராகவேந்திர கணேசை தொடர்பு கொள்ள நாங்கள் அனைத்து முயற்சியும் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி இன்போசிஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது,
ஒரு ஊழியரை தவிர பிரஸ்ஸல்ஸில் உள்ள அனைத்து ஊழியர்களையும் நாங்கள் தொடர்பு கொண்டுவிட்டோம். மாயமாகியுள்ள ஊழியரின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளோம். அவரை கண்டுபிடிக்க இந்திய தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுகிறோம். அவரை கண்டுபிடிப்பது தான் எங்களின் முதல் வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.