இந்தியக் கப்பற்படையில் இணைகிறது பிரமாண்ட போர்க்கப்பலான ‘விக்கிரமாதித்யா’
மாஸ்கோ: இந்திய கடற்படையில் பிரமாண்டமான, விமானம் தாங்கி கப்பலான, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க் கப்பல் நாளை இணைக்கப்படவுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விக்கிரமாதித்யா போர்க்கப்பலின் கட்டுமானப்பணி, கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் தாமதமாக தற்போது இக்கப்பல் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.
நாளை இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான விழா, ரஷ்யாவின் செவ்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ரஷ்யா சென்றுள்ளார்.
சுமார் 45 ஆயிரம் டன் எடை மற்றும் 284 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக்கூடிய 28 ஏவுகணைகள் உள்ளன. மிக்-29 K ரக விமானங்களை தாங்கிச் செல்லும் திறன்படைத்த, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா கப்பலில், போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.