பாக். மரண தண்டனை விதித்த குல்பூஷண் ஜாதவ் வழக்கு- சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
திஹேக்: இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய குல்பூஷண் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்தியாவின் 'ரா' அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.
இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் கடந்த மாதம் 10ம் தேதி மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு தொடர்ந்தது.
ராணுவ அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்திருந்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச நீதிமன்றம் பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேச நீதிமன்றத்தில் முன் வைத்தன.
இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கள் கிழமை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று, இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.